சனி, ஆகஸ்ட் 27, 2011

ரம்ஜான் பண்டிகை.

உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த

ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பண்டிகை.

ஈத் உல் ஃபிதர் என்று அழைக்கப்படும் இப்பண்டிகை,

பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டது.

ஃபிதர் என்றால் தானம் அளிப்பது என்று பொருள்.

இருப்போர், இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதும்,

இறைவன் முன் அனைவரும் சமம் என்பதும் தான் இப்பண்டிகையின் உட்கரு.

ஈத் என்பது ரமலான் மாதத்தின் இறுதியில் வரும் பண்டிகை.

இந்த மாதம் முழுவதும் பகல் வேளைகளில்

முஸ்லிம்கள் உண்ணா நோன்பு கடைபிடிக்கின்றனர்.

சூரியன் உதிப்பதற்கு முன் உணவு உட்கொண்டு,

சூரியன் மறைந்தபின் தான் தமது நோன்பை முடிக்கிறார்கள்.

நோன்பு இருப்பவர்கள் பகலில் நீர் அருந்துவது இல்லை,

எச்சில் கூட விழுங்குவதில்லை.

ஈத் பண்டிகை அன்று காலை உறவினர்களும், நண்பர்களும்

ஈத்-முபாரக் என்ற வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

எல்லோரும் கூடி தொழுகை நடத்துகிறார்கள்.

இது பெரிய மைதானத்தில் நடக்கும்.

அங்கு முஸ்லிம் மதத்தலைவர் காஜி ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்.

தொழுகைக்குப் பின் அவர் அறிவுரை வழங்குவார்.

இதற்குப் பிறகு தங்கள் உறவினர்களையும்

நண்பர்களையும் சந்தித்து விட்டு,

படைத்து வைத்துள்ள விருந்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து,

தாமும் உண்டு மகிழ்வர்.

முஸ்லிம்களில் ஷியா பிரிவினர்

ரமலான் மாதத்து இருபத்தி ஒன்றாவது நாளையும்,

இருபத்திரண்டாவது நாளையும் துக்க நாட்களாகக் கருதுகிறார்கள்.

இந்த துக்கம் முகம்மது நபி நாயகத்தின் மாப்பிள்ளை அலியின்

வீரமரணத்திற்காக அனுசரிக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் தான் புனித குர் ஆன்

மேலுலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த மாதத்தின் கடைசி பத்து இரவுகளில்

குர்ஆன் முதலில் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.


எத்தனை முறை படித்தாலும் அலுப்போ சலிப்போ

ஏற்படுத்தாத ஒரு நூல் இருக்கிறது.

ஒவ்வொரு முறை படித்து முடிக்கும்போது

ம் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல்.

அதுதான் அருள்மறை குர்ஆன்.

குர்ஆன் இறைவனின் திருச்செய்தி ஆகும்.

அது அருளப்பட்டது, முழுக்க முழுக்க மனிதர்களுக்காக.

எல்லோருக்கும் அதில் உரிமை உள்ளது. ‘

அது எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.

குர்ஆனைப் படிப்பவர்கள்தாம் அதிலிருந்து அறிவுரை பெற முடியும். ‘

இது நமக்காகவே அருளப்பட்ட வேதம்’ என்ற உணர்வுடன்

ஒருவர் அதைப் படித்தால் அவர் இறைவனுடன் தொடர்பு கொள்கிறார்.

வல்லமை மிக்க இறைவன் மனிதர்களுடன் உரையாடுவது போலவும்

தன்னுடைய அறிவுரைகள், கட்டளைகள், செய்திகள்

ஆகியவற்றை மனிதனுக்கு நேரடியாக வழங்குவது போலவும்

ஓர் அனுபவம் குர் ஆனைப் படிப்பவர்க்கு ஏற்படுகிறது.

இவ்வாறு இறைவனுடன் உரையாடும் மாபெரும் அருட்பேறு

மனிதர்களுக்குக் கிடைக்கிறது.

உலகின் படைப்பாளனும் பாதுகாப்பாளனுமான

இறைவனின் அருட்செய்தியைப் படித்துப்

புரிந்துகொள்வதைவிட மிகச் சிறந்த பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?

இதை நிராகரிப்பவர்கள் பார்வையிருந்தும்

பார்க்கத் தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை: