வெள்ளி, ஜனவரி 17, 2014

குளுருக்கு கொள்ளு சமையல்

 கொள்ளு   என்பது ஒருவகை பயறு வகையாகும். 

இதனைத் தென் தமிழகத்தில் காணம், காணாம் பயறு  என்றும் கூறுவார்.

இது தட்டையாக, பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும். 


Sa-horsegram.jpg

புரதம் நிறைந்த ஒரு தானியம்.

 புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும்,

 இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. 

பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பது   சுப்பீரியர் புரதம். 

பருப்பு உணவு மூலம் கிடைப்பது இன்ஃபீரியர் புரதம். 

சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை.

 எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் 

மூலம் கிடைக்கிறஉயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் கொள்ளு.


ஆயுர் வேதத்தில்பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 
பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சனைக்கு,
 இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த  
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், 
சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், 
அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்  உதவுவதாக

ஆயுர்வேதம் சொல்கிறது.
சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட 
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப்  அருந்த வேண்டும்

என பரிந்துரைக்கப்படுகிறது. 
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக உபயோகிக்கிறார்கள்.
கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சனைகளுக்குத் தடவுகிறார்கள்.
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். 

உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். 

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், 

உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.

வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும்

 மிகவும் உகந்தது.

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், 

அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சொல்வர்.

கொள்ளு சூடானது என்பது உண்மைதான், 

அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். 

அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள 

அறிவுறுத்தப்படுகிறது. 

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். 

குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. 

கொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது.

 உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. 

மனிதர்களுக்கும் அப்படித்தான்.

புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று

 சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு 

ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. 

அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கிறது. 

நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க 

வல்லது என்கிறார்கள்

அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் 

வல்லமையும் வாய்ந்தது.

ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை 

பெருமளவில் குறைக்கும்.  

கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும்

 உடனடியாக குறைக்க உதவும்.


இளைத்தவன் எள்ளு விதைப்பான்,
கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.
இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால்
 இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் 
எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்
,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று

முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

கொள்ளில் செய்யக்கூடிய சில சமையல் வகைகள் இதோ:
கொள்ளு சூப்:
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க:
நல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை: 
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க

வறுத்துக்கொள்ளவும்
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 
மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து
 நன்கு கரைத்து வைக்கவும்.
 வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
 கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து
 கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் 
தேவையான அளவு உப்பு சேர்த்து 
அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு மசியல்:
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 
4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். 
வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,
மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து 
வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும். 
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு ரசம்:-
கொள்ளு----------  100கி 
தக்காளி -----------  2
பச்சை மிளகாய் ----- 2
வர மிளகாய் ---------  2
சாம்பார் பொடி -------- 1/2 டீஸ்பூன்  
மிளகு,சீரகம் பொடித்தது ----1/2 டீஸ்பூன்  
புளி ----------- ஒரு பெரிய நெல்லி அளவு 
மஞ்சள் தூள் --- 1 டீஸ்பூன்  
கடுகு ----   1/2 டீஸ்பூன்  
பெருங்காயத் தூள் ---- ஒரு சிட்டிகை 
நெய் -------- 1 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்துமல்லி 
உப்பு --- தேவையான அளவ
செய்முறை:
கொள்ளுடன் மஞ்ச தூள் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.
புளியை கரைத்து [தேவையான அளவு] வடிகட்டி வைக்கவும்.
புளித்தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய்,
 ஒடித்த வரமிளகாய், உப்பு, சாம்பார் பொடி,  பெருங்காயத் தூள் 
போட்டு கொதிக்க விடவும்.
வெந்த கொள்ளுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கடையவும்.
இதை கொதிக்கும் புளி நீரில் சேர்க்கவும்.  
ஒன்றாக சேர்ந்து கொதித்து நூரைத்து வரும் போது 
அடுப்பை அணைத்து, இறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை தளித்து சேர்க்கவும்,
மல்லித் தழை தூவவும்.
சளி, ஜலதோஷம் உள்ளபோது செய்ய வேண்டியது.
கொள்ளு ரசத்தை வேறு முறையிலும் செய்யலாம்.
கொள்ளு வேக வைத்த நீர் 2 கப் 
தேவையான அளவு புளித்தண்ணீர் 
தக்காளி ஒன்று 
பச்சை மிளகாய் அல்  வர மிளகாய் 2
ரசப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
தட்டிய பூண்டு 3 பல் 
ஒரு டீஸ்பூன் நெய் அல்  எண்ணையில்
 கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து,
கீறிய மிளகாய்,பூண்டு சேர்த்து புளித்தண்ணீர் சேர்க்கவும்.
கொதிக்கும் போது மஞ்சத் தூள், ரசப்பொடி  சேர்க்கவும்.
கொள்ளுத் தண்ணீர்,உப்பு சேர்க்கவும்.
நன்கு கொதித்ததும்  இறக்கி மல்லித் தழை போடவும்.
இதை சூப் போல் வேண்டும் என்றால் 
புளித்தண்ணீர், சேர்க்க வேண்டாம்.
தாளிப்புக்கு கட்டாயம் வெண்ணை போட வேண்டும்.
தட்டிய சின்ன வெங்காயம் 4-5 போடவும்.
2 கப் அளவிற்கு, 1/2 தக்காளியை நன்கு அடித்து 
வடிகட்டி சேர்க்கவும்.
பரிமாறும் போது  வடிகட்டி டம்பளரில் ஊற்றி 
மேலே கொஞ்சம் நெய் ஊற்றவும்.