சனி, டிசம்பர் 13, 2008

கவிதை

அடே, அசட்டு தசரதா!
உன் அருமை ராமனை
பதினாலு வருடம் பிரிந்ததற்கே
அவசரப்பட்டு உயிரை விட்டாயே!
நாங்கள் எல்லாம்
நவீன தசரதர்கள்!
நடுத்தர வர்க்கத்திலேயே
நாளும் நீச்சல் போட்டு,
நெஞ்சு நிறைய ஆசையுடன்
வங்கிக் கடனுடன் - எங்கள்
கண்மணிகளின் கல்வியைக்
கச்சிதமாய் முடித்து விட்டு
"அக்கடா" என நிமிர்ந்தால்
கம்ப்யூட்டர் படித்த எங்கள்
கண்மணி ராமன்கள்
கை நிறைய காசுடன்
அமெரிக்க வாழ்வுக்கு
அடிமையாகி விட்டார்கள்!
இருவருட இடைவெளியில் - ஏதோ
எட்டிப் பார்க்கும் மகனை- அவனது
அரைக்கால் டிராயரிலும்
அமெரிக்கப் பேச்சிலும் -எங்களுக்கு
அடையாளம் கூடத் தெரிவதில்லை
பதினாலு வருடப் பிரிவிற்கே
புத்திர சோகம் என்று
புலம்பித் தள்ளினாயே!
முதுமை முழுவதும் தனிமையுடன்
முகம் தெரியா வியாதிகளுடன்
முட்களின் மேல்
நாட்களை நகர்த்தும்
எங்களைக் கண்டிருந்தால்
ஒரு வேளை நீயும்
உயிரை விட்டிருக்க மாட்டாயோ ............?

சனி, டிசம்பர் 06, 2008

ஒரு உள்ளத்தின் குமறல்

ஹாலை நிறைக்கும் சோபா செட்டுகள்
ஹாயாக பார்க்க வண்ணத் தொலைக்காட்சி
நளினமாக சமைக்க மைக்ரோவேவ் அவென்
உல்லாசமாக உலா வர ஏசி கார்
கால மாற்றத்தின் சாட்சியாய் கணினி
அத்தனையும் உண்டிங்கு வீட்டில்
ஆனாலும் நிறைவில்லை மனதில்!
பத்து வயதில் பட்டாம் பூச்சி பிடித்து ,
கண்ணா மூச்சி ஆடி,
கட்டவிழ்த்த கன்றுக் குட்டியாய்,
துள்ளித் திரிந்த சந்தோசம் அப்போது:
காகம் போல் கூடி வாழ்ந்தது அக்காலத்தில்:
விருந்தோம்பலே அறியாக் குழந்தைகள் இக்காலத்தில்
எத்தனை கொட்டிக் கொடுத்தாலும்
திரும்பாது அவ்வாழ்க்கை ................
நிறைவான சந்தோசம் அப்போது
நிஜமான சந்தோசமில்லை இப்போது
பாவமாய் குழந்தைகள்!
பாரம் சுமக்கின்றனர்
அநாதரவாய் பெற்றோர்
அன்பு தேடுகின்றனர்
வருமா அந்த
வசதிகளற்ற ஆனந்த வாழ்க்கை?

ஒரு அப்பாவின் தவிப்பு

உப்பு மூட்டை தூக்கப்பா என்று என் மகன் கெஞ்சிய போதெல்லாம்
"ஊர்ப்பட்ட வேலை இருக்கப்பா" என்று சொல்லி ஓடினேன்....!
உள்ளத்தில் பொங்கிடும் அன்பை ஒரு துளியும் சிந்தாமல் ஓடினேன்.
மணிக்கொரு கூட்டம், மணிக்கணக்கில் பேச்சு, பங்குச்சந்தை நிலவரம்,
விற்பனை உயர்வு, இத்தனையும் எதற்கு? பொருள் தேட எனக்கு...!
இன்று என் மகன் ............................................................................................?
வளர்ந்து சிறகுகள் முளைத்துப் பறந்து விட்டான்.
ஒன்றை மட்டும் உணர்கிறேன்: மனது கனக்கிறது.
இன்று அந்த சின்ன மகனை ஒரு முறை உப்புமூட்டை தூக்க
இந்த உலகத்தையே விலை பேசத் தயாராக இருக்கிறேன் ...................!
ஆனால் .........................................................?

வெள்ளி, டிசம்பர் 05, 2008

மழை

ஆண்டாளின் திருப்பாவையில் உள்ள நாலாவது பாடல் இது. கண்ணனையே மழை தெய்வமாக வைத்துப் பாடப் பெற்ற பாடல். "ஆழி மலைக் கண்ணா" எனத் துவங்கும் பாடலைப் பாடினால் மழை வரும்.
இது போல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்புன்கூர் பாசுரமும் அமைந்துள்ளது. இதைப் பாடினாலும் மழை வரும் என்பது ஐதீகம்.
வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கோள் கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூருளானே.
இப்பாசுரத்தை பக்தியோடும், நம்பிக்கையோடும் பாராயணம் பண்ண வேண்டும்.

செவ்வாய், டிசம்பர் 02, 2008

மாதங்களுக்கு பெயர் வந்தது இப்படி?

ஜனவரி-ஜனூயேரிஸ் என்ற இலத்தீன் வார்த்தையில்லிருந்து வந்தது. இதற்கு "ஜனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்" என்று பொருள்.
பிப்ரவரி -பெப்ருயேரிஸ் என்ற இலத்தின் வார்த்தையிலிருந்து வந்தது. "பெப்ருயா" என்றால் தூய்மையாக்கல் என்று பொருள். முன்பு இம்மாதத்தின் 15- இம் தேதி தங்களை தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழாக் கொண்டாடினார்கள்.
மார்ச்-மார்ஸ் என்பது ஒரு ரோமானிய போர் கடவுளின் பெயர். இக்கடவுளின் மாதம் என்னும் பொருளில் மார்ச் என பெயர் பெற்றது.
ஏப்ரல் -ஏப்ரிலிஸ் என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.இச் சொல்லும்
ஏப்பரைர் என்ற மற்றொரு இலத்திதீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. "ஏப்பெரைர்" என்றால் துவக்கம் என்று பொருள். பண்டைய ரோமானியர்கள், ஏப்ரல் மாதத்தில்லிருந்து ஆண்டை துவக்கினார்கள். ரோமானிய காலண்டர் கணிக்கப்பட்டவுடன்,மார்ச் மாதத்தை ஆண்டின் துவக்க மாதம்
ஆக்கினார்கள்.
மே-ரோமானிய கடவுள் மெர்குரியின் தாய் மேய்யா என்ற தேவதையின் பெயரிலிருந்து வந்ததுதான் மே மாதம். வளர்ச்சிப் பெருக்கின்
தேவதை இவள்.
ஜூன்- ஜுனோ என்ற இளமையை குறிக்கும் தேவதையின் பெயரிலிருந்து வந்ததுதான் ஜூன் மாதம்.
ஜூலை- மாமன்னர் ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால், அவர் நினைவாக, சீசரே இம்மாதத்திற்கு தன் பெயரை வைத்தார்.
ஆகஸ்ட்- ரோமானிய சக்ரவர்த்தி ஆகஸ்ட்டஸ் சீசரை கௌரவிக்கும்வகையில் இம்மாதத்திற்கு ஆகஸ்ட் என்று பெயரிடப்பட்டது.
செப்டம்பர்- ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்திலிருந்து ஆண்டு துவங்கியது. செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் எழு என்று பொருள்.
அதனால், ஏழாவதாக வந்த மாதத்திற்கு செப்டம்பர் என்று பெயரிடப்பட்டது.
அக்டோபர்- ரோமானிய மொழியில் ஆக்டோ என்றால் எட்டு என்று பொருள். அதனால், ரோமானிய காலண்டர்படி இம்மாதம் அக்டோபர் என பெயரிடப்பட்டது.
நவம்பர்- ரோமானிய மொழியில் நவம் என்றால் ஒன்பது என்று பொருள். ரோமானிய காலண்டர்படி ஒன்பதாவது மாதமான இதற்கு நவம்பர் என பெயரிடப்பட்டது.
டிசம்பர்- ரோமானிய மொழியில் டிஸெம் என்றால் பத்து என்று பொருள். ரோமானிய காலண்டர்படி பத்தாவது மாதமான இதற்கு நவம்பர் என பெயர் வந்தது.

சிறுகுறிப்பு

பழம்,புஷ்பம், வெற்றிலை,பாக்கு


இவைகளை அலச்சியமாய் வாங்க கூடாது.


அக்கினியை வாயால் தி எழுப்பவோ,


அணைக்கவோ கூடாது.


உரல், அம்மி,உலக்கை,வாயிற்படி, முற்றம்


இவைகளில் உட்காரக் கூடாது


இரவில் மீந்த உணவை


மண் பாத்திரங்களில் வைத்திருக்க கூடாது.


அன்னம்,உப்பு, நெய் இவைகளை


கையால் பரிமாறக் கூடாது.


உப்பும், நெய்யும் எச்சில் செய்த பின்


பரிமாறக் கூடாது.


இரவில் தைக்க கூடாது.


மாலையில் குப்பை கொட்டக் கூடாது.

அமாவாசை,   திதி கொடுக்கும் நாட்களில்

வாசலில் கோலம் போடக் கூடாது. 


நல்ல காரியங்கள் நடக்கும் போது

  அமங்கல வார்த்தைகளைக் கூறக் கூடாது.


நல்வாழ்த்துக்கள்

குன்றென நிற்றல் வேண்டும்.
குடையென பணிதல் வேண்டும்.
மன்றினில் உயர்தல் வேண்டும்.
மனதினில் அமைதி வேண்டும்.
நன்றென நினைப்பதெல்லாம்
நடத்திடும் துணிவு வேண்டும்.

திங்கள், டிசம்பர் 01, 2008

பயனுள்ளவை

வினிகர்-இது ஊறுகாயில் பயன்படுத்த படுகிறது என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் வினிகரை பலவிதங்களிலும் பயன்படுத்தலாம்.
கைகளில் வாழைப்பூ கரையை போக்க,வினிகர் கலந்த நீரில் கை கழுவ வேண்டும்.
குளியல் அறை சுவர், வாஷ்பேசின் குழாய் ஆகியவற்றில் உப்புநீர் கரை படிந்திருந்தால்,வினிகர் உடன் சிறிது உப்பு கலந்து தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
ஆடைகளில் வியர்வை வாடை, வியர்வை கறை இருந்தால், அவ்விடங்களில் சிறிது வினிகரை தடவி,பிறகு நனைத்து துவைத்தால் வாடையும், கறையும் போய்விடும்.
குளிக்கும் போது வெந்நீரில் சிறிது வினிகர் கலந்து தலைக்கு குளித்தால் முடி மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
சமையல் பாத்திரங்களில் வாடை இருந்தால் அதில் வினிகர் கலந்த நீரை ஊற்றி கொதிக்க வைத்தால் வாடை போய்விடும்.
கோதுமை மாவுடன் சிறிது வினிகர் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி வர முகம் பொலிவு பெறும்.
வெங்காயத்தில் சிறிது வினிகர் சேர்த்து சாப்பிட்டால் வியரிக்கொருவியர்க்குரு,வேனல் கட்டி வராது.

பயனுள்ளவை

பூண்டு ----உணவில் பூண்டை சேர்த்துகொண்டால் பாக்டீரியா,வைரஸ் மூலமாக வரும் உடல் கோளாறுகள் வராது. இருமல் முதல் kolastral வரை வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதில் உள்ள அல்லிசின் என்ற ரசாயன பொருள்தான், இதன் தனிப்பட்ட மணத்திற்கு காரணம்
தேங்காய் எண்ணையில் சில சொட்டு பூண்டு சாறு அல்லது தட்டிய பூண்டு பல்
இரேண்டோ சேர்த்து சூடாக்கி ,காதில் ஊற்றினால் காது குடைசல், வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம். முக்கியமாக கவனிக்க வேண்டியது சூடான எண்ணையை காதில் ஊற்றக்கூடாது.
வாய்வு தொல்லைகளுக்கு,பூண்டு நல்ல மருந்து.
அசைவ உணவுகள்,குருமா போன்ற மசாலா சேர்த்து செய்யும் பதார்த்தங்களில்,பூண்டு நல்ல வாசனை தருவதோடு, செரிக்கவும் உதவுகிறது.
பூண்டின் மகத்துவம் பற்றி இங்கிலாந்து போன்ற நாடுகளும் தெரிந்து வைத்துள்ளன. பூண்டு தொடர்பான மருந்துகள் அதிகம் விற்பனை ஆகின்றன. மேலை நாட்டினர் இதனை ஆராய்ந்து, வியக்கின்றனர்.
ஆனால், நம் முன்னோர், "உணவே மருந்து " எனும் உண்மையை உணர்ந்து நாள்தோறும் உணவில் இதனை சேரும்படி ந்ம் சமையலை, பல நூறாண்டுகளுக்கு முன்பே அமைத்துள்ளனர். என்னே ந்ம் மூதாதையரின் அறிவுகூர்மை!

வியாழன், நவம்பர் 27, 2008

பெண்

ஆறு வயதில் ஆசிரியர் ஆக நினைத்தேன். பத்து வயதில் பொறியாளர் ஆக நினைத்தேன்! பதினாறாவது வயதில் மருத்துவர் ஆக நினைத்தேன். ஆனால் இன்று .............? என் வீட்டுக் குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர் ஆகி விட்டேன். என் வீட்டில்லுள்ள பழுதடைந்த பொருள்களுக்கு பொறியாளர் ஆகி விட்டேன். என் வீட்டில்லுள்ள நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மருத்துவர் ஆகி விட்டேன். மொத்தத்தில்............... இனிய இல்லத்தரசி ஆகி விட்டேன்.

இரக்க மனசு

முல்லைக்கொடி படர்திருந்த ஜன்னல் கதவை மூட மனது வரவில்லை; போர்வையில் நடுங்கி கொண்டிருந்தாள் முதியோர் இல்லத்தில் கிழவி

உங்கள் பார்வைக்கு

புகுந்த வீடு புறப்பட்ட புதல்விக்கு புத்தி சொன்னாள் தாய் .......... "லட்சங்கள் தந்து வாங்கிய புருஷன் ; ஹாண்டில் வித் கேர்." இன்றைய காலகட்டத்தின் யதார்த்தை நகைசுவையுடன்,சுருங்க சொல்லி புரியவைத்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள். இதனை எழுதியவர் என். கோமதி.நான் படித்து மிகவும் ரசித்தது.நீங்களும் படிக்க வேண்டும் என்று எண்ணி தந்து உள்ளேன்.

திங்கள், நவம்பர் 24, 2008

என் கருத்து

வலைப்பதிவு
இந்ததளத்திற்கு வலைப்பதிவு என்னும் பெயரைவிட மனப்பதிவு என்னும் பெயரே மிக பொருத்தமாக இருக்கும் ;மனதின் எண்ணங்களை, உணர்வுகளை பதிவு செய்யும் இடமாக இருப்பதால் ,இது மன பதிவு தளம் தானே ?
இரெண்டு வருடங்களுக்கு முன்,எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகம் ஆனது .பலரின் சுவாரசியமான பதிவுகளை படித்தேன் .படித்து கொண்டும் இருக்கிறேன்.எனக்கென்று ஒன்று உருவாக்க தயக்கம் ;பல கேள்விகள்;சில சந்தேகங்கள்; வலைத்தளங்களின் தவறான பயன்பாடு பற்றிய பயம். ஆனாலும் ,சரியோ,தவறோ என் கருத்துக்களை கூற ஒரு இடம் வேண்டுமென்று இத்தளத்தை தெரிவு செய்தேன்.
என் எண்ணங்கள், நான் படித்து ரசித்ததை பகிர்ந்து கொள்வது, மற்றவர்களின் கருத்தை அறிந்து கொள்வது என பல பயன்களை பெறுவது என்று இத்தளத்தினை துவங்கி உள்ளேன்.

ஞாயிறு, நவம்பர் 23, 2008

அம்மா அம்மா .............. அம்மா .............. உன் அன்பை சுவாசிக்கிறேன். உன் அருகாமையை அறிகிறேன். உன் தொடுதலை உணர்கிறேன். ஆனால் நீ எங்கே .............? ஆலமரமாய் நீ இருந்தாய்; அரவணைத்து காத்தாய்; மண்ணை விட்டு மறைந்தாய்; அனாதையாக நிற்கின்றேன். கண் கலங்கினால் தவிப்பாயே. இன்று .............................. கண்ணீரில் கரைகின்றேன். ஆனால் நீ எங்கே ...........?